Tuesday, January 8, 2008

மாறுமோ இதுவும்?.......

அதிகாலையில் எழும்பி அவசர அவசரமாய் வெளிக்கிட்டு முதன்முதலாய் Plane ஏறப்போறன் என்ற சந்தோசத்தில் வந்த எனக்கு பழகிப்போன 1வது 2வது 3வது என சோதனைச்சாவடிகளும் எரிச்சலூட்டின. பல மணி நேர காத்திருப்பின் பின் குறித்த விமானசேவைக்குரிய பஸ் "திருவாரூர்த் தேர்" மாதிரி வந்தது. மீண்டும் அதே பல்லவி... பல சோதனைகளையும் கடந்து சாதனை படைத்த சந்தோசக் களைப்புடன் இருந்தவர்களுக்கெல்லாம் இன்னொரு இலவச இணைப்பு போல இலவசமாக போட்டோவும் எடுக்கப்பட்டு சந்திரமண்டலத்திற்குச' செல்வது போல ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தாச்சு.

அவர்கள் கிரிக்கெட் பார்ப்பதற்காய் இலங்கை கிரிக்கட் விளையாடும் நாட்களில் மட்டும் ஒழுங்காய் கிடைக்கும் 24 மணிநேர மின்சாரம் மற்றைய நாட்களில் அடிக்கடி வந்து மின்னி விட்டுச்செல்லும். இரவு 6 மணிக்கே படலையைப் பூட்டி 8 மணிக்கெல்லாம் வீட்டுக் கதவையும் பூட்டி விட்டு பயந்தபடி வாழ்ந்த நான் கொழும்பு வந்ததும் ஏங்கி விட்டேன், திறந்தவெளிச்சிறைச்சாலையிலிருந்து தூக்கி ஒரு வேற்று உலகத்தில் விட்டமாதிரி...

1ம் திகதி ஒரே வெடிசத்தம்......நான் கட்டிலுக்கு கீழே போக வெளிக்கிட வீட்டில இருந்தவர்கள் கேட்டிச்சினம் என்ன ஊர் ஞாபகம் வந்திட்டுதோ எண்டு... அவங்கள் NEWYEAR க்கு வெடிக்கிறாங்கள்.. பயப்பிட வேண்டாம் என்று.. எனக்கு சீ எண்டு போச்சு....பிறகு ஒரு மாதிரி கட்டிலுக்கு கீழ என்னவோ ஓடின மாதிரிக் கிடந்ததெண்டு சொல்லி சமாளிச்சிட்டன். பிறகு Police report எடுக்கோணுமாம் என்று வீதிக்கு வந்தால் விசில் அடிச்சிட்டான். அடக்கடவுளே இனி 1 மணித்தியாலம் அல்லது 2 மணித்தியாலத்தில தான் விடப் போறான், இவளுக்கேதும் உள்பாதை தெரியுமோ என்று எண்ணியபடி தோழியைப் பார்த்தால் அவள் சிரிச்சுக்கொண்டு அது traffic ற்கு ஊதுகிறான் என்றாள். சரி Shopping போவமென;று வெளிக்கிட்டு ஒரு மாதிரியா இரவு 8 மணிக்கு எல்லாம் முடிச்சு வெளிக்கிட்டா திகைச்சிட்டன். எங்கட ஊர் கோயில் திருவிழாவில் கூட இப்படி light ஐ கண்டது இல்லை

என்ன ஒன்று மட்டும் மாறேல்லை... எங்க போனாலும் கூடவே பிறந்தது போல அடையாள அட்டை மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...

No comments: